Wednesday 20 May 2015

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதேச அலுவலகம் அங்குரார்ப்பணம்

பிரேம்...


ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதிநிதிகளாகச் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு அலுவலகம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் இன்று, 20-05-2015 புதன்கிழமை காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரது தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்த இவ்வைபவத்தில் சமய அனுஸ்டானங்களுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.

ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட 22 கிராமசேவகர் பிரிவுகளுக்குமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜி.தயாபரன், கே.ரஞ்சித்குமார் மற்றும் கே.செல்வானந்தம் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் பூர்த்தி செய்துகொள்ளவேண்டிய அடிப்படைத் தேவைப்பாடுகள், பின்பற்றவேண்டிய சட்ட வரையறைகள் என்பன தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சார்பில் முகவர்களாகச் செயற்பட்டு அதன் பணிகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துபவர்களாகப் பணியாற்றிவருவதுடன், குறித்த பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடு சென்றவர்களின் குடும்ப நலநோம்பல்களைக் கண்காணித்து பிரதேச செயலாளரூடாக அமைச்சுக்கு அறிக்கையிடுபவர்களாகவும் செயற்பட்டுவருகின்றனர்.

இருப்பினும் தமது கடமைகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினூடாக வெளிநாடு செல்வோரைச் சந்தித்தல், அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரகசியத்தன்மையினைப் பேணும்பொருட்டு தனியானதொரு அலுவலகம் தமக்கு அவசியமென ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலக வளாகத்தில் அவர்களுக்குத் தனியான அலுவலகம் ஒதுக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டதுடன் இன்றைய நிகழ்வைச் சிறப்பிக்கும்வகையில் தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த பெண்களுக்கு இலவச சேலைகளை அன்பளிப்பாக வழங்கும் வைபவம் அங்கு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: