Monday 8 June 2015

பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

  பிரேம்.....
ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கீழ் செயற்படும் கிராமமட்ட மகளிர் சமுக முன்னேற்றக்குழுக்களின் தலைவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியும், நிருவாகக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடாத்துதல் சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வும் ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இன்று (08) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர்களான ஜனாப். எம்.அமீர் அலி, கே.ரினோஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்விற்கு வளவாளராக தலைமைத்துவப் பயிற்றுவிப்பாளர் ரி.சுரேஜினி கலந்துகொண்டார்.

ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கீழ் செயற்படும் 51 கிராமமட்ட மகளிர் குழுக்களின் தலைவிகள் பங்குபற்றிய குறித்த நிகழ்வில் பங்குபற்றுனர்களிடையே குழுக்களாக இயங்குதல், ஏனைய தரப்பினரது கருத்துக்களைக் கேட்டல், தமது கருத்துக்களை ஏனையவர்களுக்கு வெளிப்படுத்தல், பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தமது கருத்துக்களை ஏனையோருக்கு முன்னிலைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் மூலமாகவும், தலைமைத்துவப் பண்புகளை வெளிக்கொணரும் வகையிலான தேக அப்பியாசங்கள் மற்றும் விளையாட்டுக்கள் மூலமான கற்பித்தல் முறையிலும் பயிற்சிகள் இடம்பெற்றன.



தொடர்ந்து ஒவ்வொரு கிராமமட்ட மகளிர் சமுக முன்னேற்றக்குழு உறுப்பினர்களும் தமக்கான நிருவாகக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடாத்துதல் சம்மந்தமான பயிற்சியினை ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் முன்னெடுத்தார்.

No comments: