Tuesday 12 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் அறிமுக நிகழ்வு

மலர்ந்துள்ள புதுவருடத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் பொது அமைப்புக்களின் வருடாந்த ஒன்றுகூடலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு நியமனம் பெற்றுள்ள உதவிப் பிரதேச செயலாளரை அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவைக்கும் வைபவமும்
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நேற்று (11) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்களும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவருகின்ற கல்வி, சமய, விவசாய, கிராம அபிவிருத்தி, மீனவர் சமாச, மாதர் அபிவிருத்தி, சமுக மேம்பாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அரசியல், வர்த்தகப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த குறித்த நிகழ்வுகள் இறைவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டன. இங்கு தலைமையுரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், பிறந்துள்ள 2016 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொது அமைப்புக்களின் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தியதுடன், இவ்வாண்டில் தங்களது அமைப்புக்களால் ஆலையடிவேம்பில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கு கருத்துக்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்கையா கஜேந்திரன் பற்றிய அறிமுக வைபவம் இடம்பெற்றது. இதில் உதவிப் பிரதேச செயலாளர் தன்னைப்பற்றி அங்கு பிரசன்னமாயிருந்த பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல், வர்த்தகப் பிரமுகர்களுக்கு அறிமுக உரையை வழங்கியதுடன், நிருவாகப் பொறுப்புமிக்க அதிகாரியாக மட்டுமல்லாமல், பொதுமக்களின் சேவைக்காகத் தன் பிறந்த மண்ணிலேயே நியமனம் பெற்றுள்ள ஒரு அரச ஊழியனாகப் பிரதேச செயலாளரோடு இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்குத் தான் ஆற்றவுள்ள சேவைகளுக்குத் தற்போதும், எதிர்காலத்திலும் அனைவரது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்ப்பதாக அங்கு குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்கையா கஜேந்திரன் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், தற்போது கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டவர். கடந்த 1999 ஆம் ஆண்டில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையில் பொது முகாமைத்துவ உதவியாளராகத் தனது அரச சேவையை ஆரம்பித்த இவர், 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதிசிறப்பு வகுப்புக்கான (SUPRA) பரீட்சையில் திறமைச் சித்தி பெற்று திருக்கோவில் பிரதேச சபையிலும் பின்னர் நாவிதன்வெளி பிரதேச சபையிலும் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

அதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை நிருவாக சேவை (SLAS) பரீட்சையிலும் சித்தியடைந்து திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக் காணி நிருவாகத் திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளராக நியமனம் பெற்ற இவர், கடந்த மூன்று வருடங்கள் குறித்த பதவியில் சேவையாற்றிய பின்னர் தற்போது ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய இவரது பாரியார் திருமதி. ஜெயராணி கஜேந்திரன் கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் பொது முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.











No comments: