Friday 29 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விசேட கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (29) காலை அக்கரைப்பற்று, பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சுற்றுப்போட்டிக்கு அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் வருகைதந்து தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரம் தொடர்பாக அங்கு விசேட உரையாற்றியதுடன், வீரர்களுக்குக் கைலாகு கொடுத்து வாழ்த்தி போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள ஜொலி போய்ஸ், பவர், இளம் பூக்கள் மற்றும் அக்கினி விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டி அணிக்கு அறுவர் கொண்ட 5 ஓவர் நொக் அவுட் போட்டிகளாக நடாத்தப்பட்டன.

இப்போட்டிகளில் இளம் பூக்கள் மற்றும் அக்கினி விளையாட்டுக்கழகங்கள் வெற்றிபெற்று குறித்த மைதானத்தில் நாளை (30) இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இறுதி நாளான நாளை (30) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்படப் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவமும் பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்வுகளைச் சிறப்பிக்கும்வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









No comments: