Friday 10 July 2015

தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு

அம்பாறை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்தை இடைநிறுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறையிலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான வழித்தடத்தில் மேலதிகமாக ஒரு பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையால் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாலேயே, இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வழமையாக இரவு ஏழு மணிக்கு ஒரு பஸ் சேவையும் எட்டு மணிக்கு ஒரு பஸ் சேவையும் அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமையிலிருந்து இரவு 7.45 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கான ஒரு புதிய பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வழமையான தமது பயணிகளின் எண்ணிக்கை இல்லாமல் போவதாகவும் அவர்கள் கூறினர். இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகள் நேரடியாக அம்பாறை நோக்கி வருவதன் நன்மை கருதியே பொருத்தமான இந்த வேளையில் தாங்கள் இந்தத பஸ் சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்தனர் 

No comments: