Wednesday 30 September 2015

தமிழ்ப் பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்...

மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமையிலிருந்து சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.



 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளே முன்வைத்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப்; பட்டதாரிகள் அமைப்பின் தலைவர்.எம்.திலீபன் தெரிவிக்கையில், 'கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் இம்மாகாணசபைக்கு முன்பாக 02 தடவைகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு அவரின் செயலாளர்; ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், கூடிய விரைவில் தீர்வு காண்பதாக முதலமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கவனயீர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

 இந்நிலையில், 05 மாதங்கள் கடந்துள்ளபோதிலும், இதுவரையில் எமக்கு எந்த நியமனங்களும் வழங்கப்படவில்லை. இனிமேலும், முதலமைச்சரை நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை. எனவே, இதில் மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும். எமக்கு உடனடித் தீர்வு கிடைக்கும்வரை இந்த  உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்;' என்றார்.

No comments: