Monday 7 September 2015

எதிரி குறித்து விழிப்பாக இருக்கவேண்டும்

அரசாங்கத்தை கொண்டுநடத்தும் போதும் அரசியல்வாதிகள் என்றவகையில் நாம் முன்னோக்கி பயணிக்கும் போதும் எம்முன்னால் அனர்த்தம் இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளவேண்டும்.  இந்த அனர்த்தம் உயிருக்கும் இருக்கின்றது. எங்கள் முன்பாக இருப்பது துன்பகரமான பயணமாகும் என்பதுடன் எதிரி குறித்து 24 மணிநேரமும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கடசியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் 69ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சி உருவாகி 5 வருடங்கள் கடந்த நிலையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவானது. எனினும்,இன்றைய போல ஒரு நாள் ஒருபோதும் உருவானதில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு வந்தது போன்று என்றுமே நடந்தது இல்லை. இது தான் நாங்கள் கட்டியெழுப்ப வேண்டிய அரசியல் கலாசாரமாகும். ஜனாதிபதி- பிரதமர் இணைந்தது போல, அமைச்சரவை இணைந்தது போல கிராமங்களும் இணையவேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக என்னை தெரிவு செய்து, நாட்டின் மாற்றத்துக்காக என்னை பொது வேட்பாளராக இணைத்து கொண்டமைக்காக அக்கட்சிக்கு நான் நன்றிகூறிக்கொள்கின்றேன். அது என்னுடைய இதயத்தில் பதிந்துள்ளது. அது மறக்கமுடியாததாகும்.  நவம்பர் மாதம் 22ஆம் திகதியன்று அரசாங்கத்திலிருந்து வெளியேறி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் வீட்டுக்கு செல்லும் வரையிலும் நானும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துக்கொண்டதில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் 20 குழுக்களுக்கு இடையில் கடதாசியில் எவ்விதமான ஒப்பந்தமும் இன்றி செய்துள்ளப்பட்ட இணக்கப்பாடு மட்டுமேயாகும் என்னை பொதுவேட்பாளராக களமிறக்கியது. நாடாளுமன்றத்தில் நான் அரசாங்கத்தின் பக்கத்தில் இருக்கும் போது, ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் முன்வரிசைக்கு வந்திருந்து இப்போது போவோமா என்று சமிக்ஞை காட்டினார். அதன் பின்னர் என்னுடைய வாகனம் முன்னோக்கி செல்கையில் என்னுடைய பயணத்தை நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஹெலிகெப்டரை நிறுத்துவதற்கு முயற்சித்தனர். எனினும், நாங்கள் அந்த ஹெலிக்கு கீழாக சென்றுவிட்டோம். எங்களுடைய பயணத்தை நிறுத்துவதற்கே ஹெலிகெப்டர் வந்தது.  அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தால் பயணம் சில மணிநேரத்துக்கு தாமதப்பட்டிருக்குமே தவிர. பயணம் தொடர்ந்திருக்கும். ஜனவரி 5ஆம் திகதி எங்களுடைய இறுதி கூட்டம் மருதானையில் இடம்பெற்றது. களுத்துறையில் கூட்டத்தை நிறைவுசெய்துகொண்டு நான் வீட்டுக்கு வந்தேன். என்னுடைய பாதுகாப்பாளர்கள் கூறினர். மருதானை கூட்டத்துக்கு என்னை அழைத்துசெல்ல முடியாது என்று.நான் போகவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூறினேன். என்னுடைய பாதுகாவலர்கள் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ரணில் விக்கிமசிங்க என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி வரவில்லையா என்று கேட்டார். நான் கூறினேன். என்னால் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாவலர்களும் சென்றுவிட்டனர் என்றேன். எனினும், ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்து என்னை அழைத்து சென்றார். என்னை மேடையில் ஏற்றிவிட்டு அவர், மக்களின் மத்தியில் சென்றார். மக்கள் மத்தியில் சென்று திரும்பிவிட்டு பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்றார். அவர், மக்கள் மத்தியில் சென்றுகொண்டிருந்த போது 25 வயதான இளைஞன் உலாவுவதை போலவே நான் உணர்ந்தேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு இன்னும் தெளிவுப்படுத்த வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிளவுபடுவதற்காக எவ்வளவு சண்டைபோட்டனர். புதிய பயணத்தில் செல்வதற்கு நாங்கள் அனைவரும் இணைந்திருக்கின்றோம். எங்களுக்கு பொருந்தாத அரசியலிலிருந்து விலகி எங்களுக்கு பொருத்தமான அரசியலை உருவாக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தமைக்காக நான் சந்தோஷமடைகின்றேன்.  என்மீது இருக்கின்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்பை நான் பொறுப்புடன் முன்னெடுப்பேன்.  நாங்கள் உருவாக்குவது புதிய நாடாகும். இன்றைய சிறுவர்களுக்கு போல நாளை பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்காகவும் நாட்டை உருவாக்குவோம். நாம் புரட்சிகர சமுதாயத்தில் புதிய தலைமுறையின் அபிலாஷைகளை அறிந்து சேவையாற்றவேண்டும். அரசாங்கத்தை கொண்டுநடத்தும் போது அரசியல்வாதிகள் என்றவகையில் நாம் முன்னோக்கி பயணிக்கும் போது எம்முன்னால் அனர்த்தம் இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளமுடியும்.  இந்த அனர்த்தம் உயிருக்கும் இருக்கின்றது. எங்கள் முன்பாக இருப்பது துன்பகரமான பயணமாகும். நாங்கள் பயணிக்கும் பயணத்தை மீண்டும் திருப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த முயற்சிகளை இல்லாதொழிப்பதற்கு இதயசுத்தியுடன் இணைந்திருந்து செயற்படவேண்டும். எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு எம்மிடத்தில் நேர்மை இருக்கவேண்டும். ஊழல் இன்றி சகலருக்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். சகல மக்களிடத்திலும் சகல மதங்களிடத்திலும் சகோதரத்துவத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும்.   எதிரி தொடர்பில் குறைவாக நினைக்கவேண்;டாம். பின்னால் வரும் பைத்தியம் என்று குறைத்து மதிப்பிடவேண்டாம். எதிரி யாரென்று உங்களுக்கும் எங்களுக்கும் தெரியும், ஈழப்பிரிவினை வாதிகள், கடந்த ஆட்சியின் போது எங்களுடைய பயணத்தை நிறுத்துவத்றகு சிலர் முயற்சித்தனர். நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்று மக்கள் பார்த்துகொண்டிருக்கின்றனர். மக்கள் எம்மீது வைத்திருக்கின் நம்பிக்கையை கைவிட்டுவிடக்கூடாது. எதிரி தொடர்பில் 24 மணிநேரமும் விழிப்பாக இருக்கவேண்டும். வேலைவாய்ப்பின்மையை குறைத்தல், இலவச கல்வி, சுகாதாரம், பலபான விவசாய பொருளாதாரத்தை கொண்ட நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதுக்காக இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று பார்த்துகொள்ளவேண்டும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இரண்டு பிரிவினரும் இணைந்து செயற்படுவது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றார்

No comments: