Wednesday 18 June 2014

ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு துண்டுப் பிரசுரம்





அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து செவ்வாய்கிழமை ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரி வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் துண்டுப் பிரசுரம் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மீதான அடக்கு முறைகளையும், தாக்குதல்களையும் வன்மையாக கண்டித்தல் என்னும் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரமானது காத்தான்குடி சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் ஒன்றியம் என பெயர் குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.


இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது!

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் பல இழப்புக்களை சந்தித்த எமது முஸ்லிம் சமூகத்திற்கு தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மகிந்த அரசு யுத்தத்தை 
முடித்து இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தத்தின் பின் நாட்டில் இன, மத பேதம் எதுவுமில்லை என்று மக்களிடம் வாக்குறுதி அளித்த போது முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு 
விட்டனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள தீவிரவாத காடையர்களால் நடாத்தப்படும் அடக்கு முறைகளும், வன்முறைகளையும் பார்க்கும் போது இந்த யுத்தம் ஏன்? முடிவுக்கு வந்தது என எண்ணத் தோணுகின்றது.

இந்த அடக்கு முறை மற்றும் வன்முறைகளின் உச்ச கட்டம் தான் கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எமது முஸ்லிம் சமூகம் செறிந்து வாழும் பேருவளை, தர்கா டவுன் போன்ற பிரதேசங்களில் சிங்கள காடையர்கள் தங்களது காட்டுமிராண்டித் தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதுடன், தற்பொழுது வரைக்கும் அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலைகாணப்பட்டு வருகின்றது.

சிங்கள காடையர்களின் தாக்குதல் காரணமாக இதுவரைக்கும் 25 வயதிற்குட்பட்ட எமது 07 முஸ்லிம் இளைஞர்கள் வபாத்தாகியுள்ளனர். (இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன்) சுமார் 10க்கு மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. காயப்பட்ட எமது சகோதர்களை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது.

இந்த காட்டுமிராண்டி தாக்குதல் சம்பவத்திற்கு முழுக்காரணமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் இயங்கும் பொதுபல சேனா என்ற ஒரு தரங்கெட்ட 
தீவிரவாத அமைப்பாகும்.

அன்பின் சகோதரர்களே! பாதிக்கப்பட்டிருப்பது எமது சமூகம் லாஹிலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதர்ரஸ{லுல்லாஹ் என்ற புனித திருக்கலிமாவை மொழிந்து முஸ்லிம்களான வாழ்ந்ததற்காகவே இவர்கள் மீது மிலேச்சத்தனமாக சம்பவம் நடந்தேறியுள்ளது.

தற்பொழுது அவர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இத்தாக்குதல் நாளை வேறு ஒரு முஸ்லிம் பிரதேசத்திலும் ஏன்? எமது பிரதேசத்திலும் ஏற்படலாம்.

கேவலம்! இந்த நிமிடம் வரைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட எமது சகோதர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. காரணம் எமது அரசியல் வாதிகளுக்குத் தெரியும் இது அரசாங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் ஒரு வன்முறை இதில் நாம் தலையிட்டால் எமது அமைச்சுக் கதிரைகள் 
ஆட்டங்கண்டு விடுமென்ற கேவலாமான குறுகிய சிந்தனையாகும்.

அன்பின் சகோதரர்களே! இனிமேலும் இந்த கைகாலாகாத முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டிருபவர்களை நம்பாமல் எமது முழு நம்பிக்கையையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது வைத்தவர்களாக அவனிடமே நாம் அனைவரும் பிராத்திப்போம்.

பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் சமூகத்திற்காகவும், இந்த கட்டுமிராண்டித் தாக்குதல்களை நடாத்திய சிங்கள காடையர்களை கண்டித்தும் இந்த சம்பவத்தின் பின்னணியில் 
உள்ளவர்களை (இரட்டை நாடகமாடுவதை கைவிட்டு) அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், செவ்வாய்கிழமை எமது வர்த்தக ஸ்தாபனங்களையும். அரச, அரசசார்பற்ற 
நிறுவனங்கள் அனைத்தும் மூடி பூரண கர்த்தால் ஒன்றை அணுஷ்டித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அல்லாஹ்வின் பெயரால் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளது.





No comments: