Monday 10 August 2015

பகல் கொள்ளை.....பெண்கள் யாக்கிரதை

எஸ்.கார்த்திகேசு 
கண்கட்டி வித்தை மூலம் தங்கநகைகளை அபகரித்துக்கொண்டு சென்ற சம்பவமொன்று அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு தம்மிடம் முறைப்பாடு செய்ததாகவும் இந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். சாகாமம் கிராமத்திலுள்ள இந்த வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆண்கள் இருவரே, தங்கநகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், 'எனது தாயை பார்ப்பதற்காக விநாயகபுரம் கிராமத்திலுள்ள எனது வீட்டிலிருந்து சாகாமம் கிராமத்திலுள்ள எனது தாய் வீட்டுக்கு தான் வந்திருந்ததாகவும் இதன்போது,  என்னை விசாரித்துக்கொண்டு எனது தாய் வீட்டுக்கு ஆண்கள் இருவர் வந்திருந்தனர். ஒருபோதிலும் அவர்களை எனக்குத் தெரியாது' எனத் தெரிவித்தார்.   'இவ்வாறு வந்த ஆண்கள் இருவரும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்புவது தொடர்பில் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்;. 

இவ்வேளையில், எனது பேத்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அவதானித்துவிட்டு இது தங்கச்சங்கிலியா என்று  இவர்கள் கேட்டதுடன், சங்கிலியையும் வாங்கிப் பார்த்துவிட்டு பொய்யான தங்கம் என்று கூறியுள்ளனர்.

பின்னர், வெளிநாட்டிலிருந்து நகைகள் மற்றும் பொருட்களை நீங்கள் கொண்டுவந்துளீர்களா என்று கேட்டதுடன்,  அந்தப் பொருட்களில் ஒவ்வொரு பொருளுக்கும் எட்டாயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த வேளையிலேயே என்னிடம் இருந்த சங்கிலி, மோதிரம், கை வளையல்கள் மற்றும் ஏனைய நகைகளை சுத்தமான தங்கநகைகளா என்;று பரிசோதிப்பதற்காக  அவர்களிடம் வழங்கியதாகவும் இந்த நகைகளை  அவர்கள் ஒரு வகையான நீரில் போட்டனர். 

இதன்போது, அந்த நகைகள் கறுப்பு நிறமாக மாறியது. இந்த நிலையில், எனது நகைகளை ஏற்கெனவே இருந்தவாறு சரியாக்கித் தருமாறு அவர்களிடம் நான்  கேட்டதாகவும் அதற்கு, அவர்கள் உப்புத் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியதுடன், கறுப்பாகிய நகைகளை  கறுப்பு சொப்பின் பையில் இட்டு இறுக்கமாக மூன்று அல்லது  நான்கு முடிச்சுக்கள் இட்டு கட்டி உப்புத் தண்ணீரில்  ஊற வைக்குமாறு கூறினார்கள். அரை மணித்தியாலத்துக்கு பின்னர் முடிச்சை அவிழ்த்து இந்த நகைகளை பார்க்குமாறும் கூறிவிட்டு இனந்தெரியாத ஆண்கள் இருவரும் சென்றுள்ளனர். 

இவர்கள் சென்றதும்  சொப்பின் பை முடிச்சை  அவிழ்த்து பார்த்தபோது வெறும் மண் மாத்திரம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளோம்' கஷ்டத்துக்கு மத்தியில் வெளிநாட்டில் வேலை செய்து உழைத்துவந்த எனது 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார். இவ்வாறான சம்பவம் ஏற்கெனவேயும் சில பிரதேசங்களில் இடம்பெற்றதாக தெரியக் கிடைத்துள்ளபோதிலும், இவ்வாறானவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments: