Sunday 13 April 2014

நடைபெற்று முடிந்த கண்ணகிகிராமத்திற்கான நடமாடும் சேவை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணகிகிராமம் - 1 மற்றும் கண்ணகிகிராமம் - 2 கிராமசேவகர் பிரிவுகளுக்கான இணைந்த நடமாடும் சேவையானது இன்று 04-04-2014, வெள்ளிக்கிழமை கண்ணகிகிராமம் – 1, கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் இந்நடமாடும் சேவையினையும் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் கண்ணகிகிராமம் - 1 கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளுக்குமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தத்தமது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினர். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற குறித்த பாடசாலையின் மாணவியையும், கடந்த வருடம் நடைபெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பாராட்டி, நிகழ்வுக்கு அதிதிகளாகக் கலந்துகொண்ட பிரதேச செயலாளர், அப்பாடசாலையின் அதிபர், கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள். இதன்போது கண்ணகிகிராமத்தின் அபிவிருத்தியில் அளப்பரிய சேவையாற்றிக்கொண்டிருக்கும் பிரதேச செயலாளர் அவர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

அதேபோன்று இவ்வாண்டு தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்குரிய நிதியுதவி, பனங்காடு கிராமத்தினைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி ரவி என்ற தனவந்தரினால் குறித்த பாடசாலை அதிபர் எஸ்.சுரேஸ் ஸ்டீபன்சனிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பமாயின. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனுசரணையுடன் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியர் குழுவினரால் ஆலையடிவேம்பு ஆயுர்வேத வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தப்பட்ட இலவச வைத்தியமுகாமில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு தமக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டனர்.

பி.ப. 4.00 மணிவரை நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று கண்ணகிகிராமப் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர். அதேபோன்று பெருமளவிலான மக்களும் திரண்டுவந்து தமக்கான சேவைகளை இங்கு பெற்றுக்கொண்டனர்.

இதன்போது கண்ணகிகிராமம் – 1 கிராமசேவகர் பிரிவில் இயங்கும் தும்புத் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளையும் அதன் சுற்றுப்புறச்சூழலையும் பார்வையிட்ட பிரதேச செயலாளர், அதன் நிறை குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் அளிக்கம்பை கிராமத்துக்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 07-04-2014, திங்கட்கிழமை அளிக்கம்பை, அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
click moor photos... (54 photos)

No comments: