Thursday 3 April 2014

நடைபெற்று முடிந்த பனங்காடு கிராமத்திற்கான நடமாடும் சேவை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பனங்காடு மற்றும் சின்னப்பனங்காடு கிராமசேவகர் பிரிவுகளுக்கான இணைந்த நடமாடும் சேவையானது இன்று 01-04-2014, செவ்வாய்க்கிழமை சின்னப்பனங்காடு NECCDEP பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் இந்நடமாடும் சேவையினையும் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் சின்னப்பனங்காடு கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளுக்குமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தத்தமது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினர். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்குப் பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள். இதில் சிறப்பம்சமாக அதிதிகள் தலைமையில் மகாசக்தி கிராமத்திலிருந்து கடந்த வருடத்தில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிச் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று, அக்கிராமத்திலிருந்து முதன்முதலாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்த செல்வராஜா தேவிகாவைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பமாயின. இங்கு குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுயதொழில் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பினையும் பெற்றனர்.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று பனங்காடு கிராமப் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர். அதேபோன்று பெருமளவிலான மக்களும் திரண்டுவந்து தமக்கான சேவைகளை இங்கு பெற்றுக்கொண்டனர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் கண்ணகிகிராமம் – 1 மற்றும் கண்ணகிகிராமம் – 2 ஆகிய கிராமங்களுக்கான அடுத்த இணைந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 04-04-2014, வெள்ளிக்கிழமை கண்ணகிகிராமம் – 1, கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: