Monday 28 April 2014

சமுர்த்தி வங்கிச்சங்க சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

ஆலையடிவேம்பு வடக்கு வலய சமுர்த்தி வங்கிச்சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் வாழ்வின் எழுச்சி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று, 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கரைப்பற்று தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த வங்கிச்சங்க முகாமையாளர் திருமதி.ரி.கமலப்பிரபா தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் கே.இரத்தினவேல் ஆகியோர் இவ்விழாவில் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன் திவிநெகும திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் இவ்விளையாட்டு விழாவில் பிரசன்னமாயிருந்தனர். சம்பிரதாயபூர்வமான வைபவங்களைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களான கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல் உட்பட சிறுவர் விளையாட்டுக்களான மிட்டாய் பொறுக்குதல், தாரா ஓட்டம், முயல் ஓட்டம், தண்ணீர்ப்போத்தல் நிரப்புதல், வினோத உடைப்போட்டி என்பன நடாத்தப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது புத்தாண்டு காலத்தில் குறித்த சமுர்த்தி வங்கியில் அதிகளவில் சேமிப்பினை மேற்கொண்ட பயனாளிகள், அத்துடன் பயனாளிகளின் சேமிப்புக்களை ஊக்குவிப்பதில் சிறப்பாகச் செயற்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: