Sunday 13 April 2014

ஆலையடிவேம்பில் நடைபெற்ற பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டி

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டி அக்கரைப்பற்று தருமசங்கரி மைதானத்தில் கடந்த 28-03-2014, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலையடிவேம்பு பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டி நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி யூ.எல்.எம்.மஜீத் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மைதான நிகழ்ச்சிகளான மெய்வல்லுனர் போட்டிகளோடு ஆரம்பமான நிகழ்வுகளைப் பார்வையிட்ட அதிதிகள், எல்லே மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு சான்றிதழ்களை வழங்கிக் கெளரவித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 12 இளைஞர் கழகங்களிலிருந்து சுமார் 200 வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய இவ்விளையாட்டுப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற அணிகள் எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அம்பாறை எச்.எம்.வீரசிங்ஹ மைதானத்தில் நடைபெறவுள்ள மாவட்டமட்ட விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: