Tuesday 3 July 2018

காட்டுப்பாதை மூடப்படும் திகதி மாற்றம்



வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து மூடும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறைமாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.



அதன்படி காட்டுப்பாதை எதிர்வரும் யூலை மாதம் அதாவது நாளை 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6மணிக்குத் திறக்கப்படும். ஆனால்  மீண்டும் அது யூலை 22ஆம் திகதி மூடப்படும்.

முன்னர் மீண்டும் மூடப்படும் திகதி 24ஆம் திகதி எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. எனினும் இறுதி 4நாட்களுள் பயணித்து 28ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளமுடியாதுபோகும் என்பதால் குறைந்தது 6நாட்கள் பயணிப்பதற்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத்தீர்மானம்  அம்பாறைமாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்  தலைமையிலான
மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் தொடர்பிலான இறுதிக்கூட்டம் நேற்று(02)திங்கட்கிழமை பகல்   உகந்தை முருகன் ஆலய வளாகத்திலுள்ள காரைதீவு மடத்தில்  நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் யூலை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

மேற்படிகூட்டத்தில் ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம். சுதுநிலமே திசாநாயக்க மொனராகல மாவட்ட மேலதிக அரசஅதிபர் பி.சோமரத்ன அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன்
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் ஆலயபரிபாலனசபைச்  செயலாளர் கு.ஸ்ரீபஞ்சாட்சரம் பொருளாளர் வீ.பத்மநாதன் பொலிஸ்அத்தியட்சகர் சமன் பொத்துவில் உதவிபொலிஸ்
அத்தியட்சகர் வெலிசற மற்றும் பிரதேச சபைத்தவிசாளர்கள் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து குமண பறவைகள் சரணாலயத்தினூடாக 6 அல்லது 8 நாட்கள் குமுக்கன் நாவலடி வியாழை கட்டகாமம் என 84கிலோமீற்றர் அடர்ந்த காட்டுக்குள்ளால் பயணித்து கதிர்காமத்தைச்சென்றடைவதே இப்பாதயாத்திரையின் நோக்கமாகும். கொடிய மிருகங்களுள்ள அந்தக்காட்டுக்குள் பிரவேசிப்பதற்கான திகதியே இது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு எடுக்கப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு .

காட்டுப்பாதை  நாளை 4ஆம் திகதி புதன்கிழமை முதல் 18 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். அந்தக்காலப்பகுதிக்குள்ளே மாத்திரம்தான் பாதயயாத்திரீகர்கள் பயணிக்கமுடியும்.
அக்காலப்பகுதியில் காட்டுப்பாதையால் பயணிப்போர் பொலித்தீன்பாவனையை முற்றாகத் தடைசெய்யவேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில் வழங்கமுடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும்.

ஆலயத்திற்கு வரும் அடியார்கள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக 31
தண்ணீர்த்தாங்கிகள் வைக்கப்படவேண்டும்.இராணுவம் விசேடஅதிரடிப்படை இதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.    திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறைக்கச்சேரியும் ஒரு வவுசரை வழங்கும்.

விசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பிவைக்கும்.
காட்டுப்பாதையால் செல்லும் யாத்திரீகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ்
வனஜீவராசிகள் திணைக்ககளம் இராணுவம் என்பன இணைந்துவழங்கும்.

உகந்தயையடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரீகர்கள் கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். கடந்தாண்டு 25ஆயிரம் பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர். இவ்வாண்டும் அதேஅளவான தொகை எதிர்பார்க்கப்படுகின்றது.

இராணுவமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடாத்துவர். ஆலயவளாகத்தில் மின்சார வசதி சுகாதாரவசதி யாத்திரீகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் சுத்தமாக
வழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

No comments: