Tuesday 17 May 2016

கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் (SWOAD) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை முடித்து தொழில் வாய்ப்பற்ற நிலையிலுள்ள இளைஞர் யுவதிகளையும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் நிலையிலுள்ள மாணவர்களையும் இலக்குக் குழுவாகக் கொண்டு, அவர்களுக்குத் தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ்களையும், அதனோடிணைந்தவகையில் பயிற்சி பெறுகின்ற துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தரும் தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாக அறிவுறுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (16) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக்கருந்தரங்கினை ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், மனித வள அபிவிருத்தி உதவியாளர் எல்.சந்திரபவன் மற்றும் திறன் அபிவிருத்தி உதவியாளர் வி.நடனகுமார் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சுவாட் அமைப்பின் திட்ட முகாமையார் எஸ்.பிறேமலதன், கள இணைப்பாளர் ரி.ரமேஷ் ஆகியோரும், கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் சார்பில் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம் மற்றும் அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சிநெறிகளுக்கான இணைப்பு உத்தியோகத்தர் திருமதி. குகாசினி ரதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இக்கருத்தரங்கின் பங்குபற்றுனர்களாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் யுவதிகளும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கை ஆரம்பித்துவைத்து தலைமையுரையாற்றிய உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், வருடந்தோறும் சுமார் ஆறு இலட்சம் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் உயர்தரம் செல்கின்றனர். பின் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அவர்களில் வெறும் 25,000 பேரே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். இங்கே வருடாவருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறத் தவறும் இரண்டு இலட்சம் பேர் அத்தோடு உயர்தரம் முடித்து பாடசாலைகளிலிருந்து வெளியேறும் மூன்றரை இலட்சம் பேர் என இவர்கள் அனைவரும் இலங்கையில் வேலைவாய்ப்பற்றவர்களாகவே இருக்கின்றனர். அவ்வாறானவர்களை இலக்காகக்கொண்டு அவர்களுக்குத் தொழிற் பயிற்சிநெறிகளை வழங்கி, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான வேலைத்திட்டங்களை எமது பிரதேச தமிழ் இளைஞர் யுவதிகள் தவறவிட்டுவிடக்கூடாது எனக் குறிப்பிட்டார்.

அடுத்து குறித்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை முன்னெடுத்த கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் சார்பில் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சுவாட் போன்ற உள்ளூர் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களோடு இணைந்து தமது நிறுவனம் இலங்கை முழுவதும் முன்னெடுத்துவரும் தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பான முன்னோட்டமொன்றை வழங்கியதுடன், அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தொடர்பாகவும் அவ்வெற்றிடங்களுக்காக தேவைப்படும் ஆளணியினரான இளைஞர் யுவதிகளுக்கு சுவாட் அமைப்பினூடாக வழங்கப்படவுள்ள தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாகவும் அங்கு விளக்கமளித்தார். அத்துடன் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்யவுள்ள மாணவர்களுக்கு அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சிநெறிகள் தொடர்பாகவும் விளக்கியதுடன், குறித்த பயிற்சிநெறிகளுக்கு பயிலுனர்கள் உள்வாங்கப்படும் முறைகள், பயிற்சிகள் வழங்கப்படும் முறைகள், அப்பயிற்சிகளின் முடிவில் அவர்கள் தொழிற்துறைகளுக்கு நியமிக்கப்படும் விதங்கள் என்பன தொடர்பாகப் பங்குபற்றுனர்கள் தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை முன்னெடுத்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சிநெறிகளுக்கான இணைப்பு உத்தியோகத்தர் திருமதி. குகாசினி ரதீசன், பிராந்தியப் பயிற்சி நிலையங்களூடாகத் தமது அதிகார சபையினால் தற்போது வழங்கப்பட்டுவரும் தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாக அங்கு குறிப்பிட்டதோடு, கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடாத்தப்பட்டுவரும் பயிற்சிநெறிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார். 










No comments: