Thursday 26 May 2016

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற தேசிய இளைஞர் தின விழாவும் இளைஞர் கௌரவிப்பும்


தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த 24-05-2016 அன்று நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு அன்றைய தினம் (24) வெகு சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் தலைமைதாங்கிய இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு விருந்தினர்களாக உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத், கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் தொழிற்பயிற்சிகள் செயற்திட்டத்தின் தலைமை உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம், அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.பிறேமலதன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.கேந்திரமூர்த்தி, மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சந்திரபவன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசந்தன், அளிக்கம்பை பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய அருட்தந்தை தேவராஜ் பீரிஸ் ஆகியோருடன் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) நிறுவனத்தின் அனுசரணையோடும் இளைஞர்களின் கலை, கலாசார, பாரம்பரிய மேடை நிகழ்ச்சிகளோடும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பாண்ட் வாத்திய இசையோடு அதிதிகள் வரவேற்று அழைத்து வரப்பட்டதோடு, தேசிய இளைஞர் சம்மேளனத்தின் வாக்குறுதி எடுத்துக்கொள்ளும் வைபவத்தோடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் வரவேற்புரையை இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் வழங்கியதோடு, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் உருப்பினர்களும், இதுகாலவரையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சிறந்த அர்ப்பணிப்பு மனப்பாங்கோடு பங்குபற்றி அவ்வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய இளைஞர், யுவதிகளும், பாடசாலை மாணவர்களும் அதிதிகளால் அங்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அடுத்து இடம்பெற்ற அதிதிகள் உரையில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத் உரையாற்றியதோடு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரதம முகாமைத்துவ உதவியாளரும் ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி அவர்களின் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி கராத்தே பயிற்சிகள் பார்வையாளர்களின் பலத்த கரகோசங்களோடு இடம்பெற்றன.

அடுத்து இவ்வருடம் மாத்தளை, யொவுன்புரவில் இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒன்றுகூடலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய இளைஞர், யுவதிகள் அதிதிகளால் அங்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இடம்பெற்ற அதிதிகள் உரையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.கேந்திரமூர்த்தி, கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் தொழிற்பயிற்சிகள் செயற்திட்டத்தின் தலைமை உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம் ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தன.

இறுதி நிகழ்வாகக் கடந்த 15-05-2016 அன்று சம்மாந்துறை, உள்ளக விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்ற அம்பாறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றியதோடு, ஆறு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுப் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்த வீர, வீராங்கனைகளும், அவர்களைப் பயிற்றுவித்த போதனாசிரியரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரதம முகாமைத்துவ உதவியாளருமான சிகான் கே.கேந்திரமூர்த்தியும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையிலான அதிதிகளால் வெற்றிச் சின்னங்கள் வழங்கியும் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டனர்.
























No comments: