Monday 23 May 2016

பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய தாகசாந்தி நிலையம்


வரலாற்றுத் தொன்மைமிக்க அக்கரைப்பற்று, பனங்காடு, பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடந்த 16-05-2016 முதல் இடம்பெற்றுவந்த வருடாந்த வைகாசி மஹோற்சவத்தின் இறுதிநாள் திருக்குளிர்த்தித் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தாகசாந்தி வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த (21) சனிக்கிழமை நண்பகலில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இத் தாகசாந்தி வைபவத்தினைப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் ஆலயத் தலைவர் கந்தவனம் கார்த்திகேசு, ஆலய நிருவாக சபையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களோடு இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

கிழக்கிலங்கையில் பாடல் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் அன்றைய ஆறாம் நாள் சிறப்புத் திருவிழாவில் கலந்துகொண்டு, கண்ணகி அம்மனின் பேரருளைப் பெற்றேக வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் தாகசாந்தி நிலையத்திற்கு வருகைதந்திருந்து தகிக்கும் கோடை வெயிலின் கோரத்தைக் குறைத்துக்கொண்டனர்.

தொடர்ந்து ஆலய அறங்காவலர் சபையினரின் வேண்டுகோளினை ஏற்று அவர்களோடிணைந்து அன்னதான வைபவத்தையும் பிரதேச செயலாளர் அங்கு ஆரம்பித்துவைத்தார்.

அதனையடுத்து இடம்பெற்ற ஆலயப்பூஜை மற்றும் சம்பிரதாயச் சடங்குகளில் பிரதேச செயலாளர் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களோடும் பொதுமக்களுடனும் இணைந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.











No comments: