Tuesday 1 March 2016

ஆலையடிவேம்பு பிரதேச சமுதாய சீர்திருத்தக் குழுவின் கலந்துரையாடல்


புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் விதந்துரைப்புகளுக்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள பிரதேசமட்ட சமுதாய சீர்திருத்தக் குழுவின் இவ்வாண்டுக்கான முதலாவது கலந்துரையாடல்
இன்று (01) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் ஆலையடிவேம்பு பிரதேச சமுதாய சீர்திருத்தக் குழுவின் தலைவருமான வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தை பிரதேச செயலக சமுதாய சீர்திருத்தங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.சரளா ஏற்பாடு செய்திருந்ததுடன், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இக்றம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான வை.விஜயராஜா, திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் முறைசாராக் கல்வித் திட்டப் பரிசோதகர் திருமதி. கே.வரதன் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள், சமுகசேவைப் பிரிவின் உத்தியோகத்தர்கள், திவிநெகும பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இக்கூட்டத்தில் முக்கியமாக சமுகத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சமுக விரோதச் செயற்பாடுகள் தொடர்பாகவும், அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மதுப்பாவனைக்கு எதிராகவும், அதன்மூலம் ஏற்படும் சமூகப் பிரச்சனைகளைக் குறைக்கும் வழிமுறைகளையும் சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் உதவியுடன் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மூலம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பரவலாக முன்னெடுப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், ஒப்பீட்டளவில் கல்வியறிவு மட்டம் குறைந்த, அதேவேளை மதுப்பாவனை அதிகமாகவும், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்தும் காணப்படும் கண்ணகிபுரம் கிராமத்தை ஓர் மாதிரிக் கிராமமாகத் தெரிவுசெய்து அவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை அக்கிராமத்திலேயே முன்னெடுப்பதுடன், அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் சிறுகுற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கும் வகையிலும் ஆலையடிவேம்பு பிரதேச சமுதாய சீர்திருத்தக் குழுவினால் அங்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.








No comments: