Monday 29 February 2016

சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியோடு காலங்கடந்த திருமணப் பதிவுகள் வழங்கிவைப்பு


இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய காலங்கடந்த திருமணங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில்
நேற்று (29) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணியும் சட்ட ஆலோசகருமான எம்.எச்.ருஷ்டி, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.சுபைர், திட்ட உத்தியோகத்தர் பி.எம்.கலாமுடீன் ஆகியோரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலதிக மாவட்டப் பதிவாளரது தலைமையுரையைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், இலங்கையில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளல்லாது கடந்தகாலங்களில் சமயச் சடங்குகள் மூலமாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் பலர் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வயது முதிர்ந்தவர்களாகவும், தலைமுறைகளைக் கடந்தவர்களாகவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், அவர்களுக்கு நேரெதிராக இன்னும் பக்குவப்படாத குறைந்த வயதில் காதல் திருமணம் செய்து பெற்றோரிடமிருந்து பிரிந்து தனித்து வாழும் குடும்பங்களும் அதிகளவு எண்ணிக்கையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்நிகழ்வின் மூலம் அவர்களது திருமணங்கள் இன்றுமுதல் சமுகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகவும் கூறியதோடு, இவ்வாறானதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வைபவமொன்றைக் கடந்த வருடம் நவம்பர், 30 ஆந் திகதியன்று நடாத்தி அன்று 23 காலங்கடந்த திருமணப் பதிவுகளை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியோடு வழங்கிவைத்தோம். எமது வேண்டுகோளையேற்று அதேபோன்றதொரு நிகழ்வொன்றை இன்றும் நடாத்துவதில் முன்னின்று உழைத்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் தலைமையிலான உத்தியோகத்தர் குழாமுக்கும், சட்ட உதவி ஆணைக்குழுவின் பணியாளர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் திட்ட உத்தியோகத்தர் கலாமுடீன், தமது வேலைத்திட்டங்களின் ஒருபகுதியாகவே குறித்த திருமணப் பதிவுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற சட்ட உதவிகளை நாடிநிற்கும் பொதுமக்கள் இலவசமான தகவல்கள், சட்ட ஆலோசனைகள், சட்ட உதவிகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் (0262238777), பொத்துவில் (0632248485), அக்கரைப்பற்று (0672279462) பிராந்திய அலுவலகங்களைத் தொடர்புகொண்டு அவற்றை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமது திருமணங்களை இதுவரையில் பதிவு செய்திராத தம்பதிகளுக்கு திருமணப்பதிவுகளைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது 25 தம்பதியினர் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மாலைகளை மாற்றிக்கொண்டு தமக்கான திருமணப்பதிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரதீப், கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியுடன் இதுபோன்ற நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், பிரதேச செயலாளரின் ஆலோசனைகளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேசக் கிராமமட்டங்களில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உதவியோடு திருமணப்பதிவுகள் அல்லாதவர்களை மட்டுமல்லாது, இதுவரை காலங்கடந்தநிலையில் இதுவரை பிறப்புப் பதிவுகள், மரணப் பதிவுகளை மேற்கொள்ளாதவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கும் குறித்த ஆவணங்களை இலவசமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
















No comments: