Monday 31 March 2014

நடைபெற்று முடிந்த கோளாவில் கிராமத்திற்கான நடமாடும் சேவை.

வழமைபோன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் கோளாவில் – 2 கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மூன்று கிராமசேவகர் பிரிவுகளுக்குமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தத்தமது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினர். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள். அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் முதியோருக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று கோளாவில் கிராம மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் பனங்காடு மற்றும் சின்னப்பனங்காடு கிராமசேவகர் பிரிவுகளுக்கான அடுத்த இணைந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 01-04-2014, செவ்வாய்க்கிழமை சின்னப்பனங்காடு கிராமிய அபிவிருத்திச் சங்க (RDS) கட்டடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: