Tuesday 25 March 2014

சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை .....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 24-03-2014, திங்கட்கிழமை சின்னமுகத்துவாரம், சென் ஜோன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வழமைபோன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து அக்கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர் உட்பட்ட அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுப் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

No comments: