Tuesday 8 December 2020

பிசிஆர் பரிசோதனை கட்டாயம்


அம்பாறை, கல்முனைப் பிராந்தியத்தில் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்றுகொள்ள வேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்

அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள் கட்டாயம் அந்தந்த சுகாதார வைத்தியதிகாரியுடன் தொடர்புகொண்டு பிசிஆர்  பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் 
புதிதாக வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு பிசிஆர் சான்றிதழ் அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் வியாபாரிகளுக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நாளாந்தம் எழுமாறாக பிசிஆர்  பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் பிசிஆர் பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

No comments: