Thursday 6 July 2017

மாணவன்; ஒருவனை, ஆசிரியர் ஒருவர் அவனது வீட்டுக்குத் தேடிச் சென்று தாக்கிய

haran


பன்னிரண்டு வயதுடைய மாணவன்; ஒருவனை, ஆசிரியர் ஒருவர் அவனது வீட்டுக்குத் தேடிச் சென்று தாக்கிய சம்பவமொன்று,
காத்தான்குடியில் புதன்கிழமை (5) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில்; 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் அப்துல் சித்தீக் முஹம்மத் சஜித் (வயது 12) என்ற மாணவனே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான்.

காங்கேயனோடையிலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், இந்த மாணவனைத் தாக்கியுள்ளார் என்று காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 'ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் கற்கும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் மற்றுமொரு மாணவனுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

எனினும், இந்தக் கைகலப்பை வகுப்பு ஆசிரியர்; சுமுகமாகத் தீர்த்து வைத்த நிலையில், பாடசாலை முடிந்து இம்மாணவர்கள் இருவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தனது வீட்டில் உணவு உட்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மாணவனை, அவனுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவன் அவனது வீட்டுக் கதவைத் தட்டி, பெயர் கூறி அம்மாணவனை வெளியில் அழைத்துள்ளான்.

அவ்வேளையில், பாதிக்கப்பட்ட மாணவன்; கதவைத் திறந்தபோது, கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனின்; தந்தையான குறித்த ஆசிரியர், முஹம்மத் சஜித் என்ற மாணவனைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவனின் அழுகைச் சத்தம் கேட்டு, அம்மாணவனின் தாயும் சகோதரியும் அயலவர்களும் வந்து பார்த்தபோது, குறித்த ஆசிரியர் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டு அம்மாணவனைத் தாக்கியவண்ணம் இருந்துள்ளார்.

இதனை அடுத்து, ஆசியரின் பிடியில் பாதிக்கப்பட்ட மாணவனை மீட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினர்.

No comments: