Wednesday 26 July 2017

ஆலையடிவேம்பில் நான்கு மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு பயிற்சி நிலையம் திறந்துவைப்பு





அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தர்மசங்கரி மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நான்கு மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டுப் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று (26) மாலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் நடைபெற்ற இத் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு பயிற்சி அரங்கினைத் திறந்து வைத்தனர்.

மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட அதிதிகள் மைதானத்தில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையினையும், பயிற்சி நிலையத்தின் நினைவுப் படிகத்தினையும் திரை நீ;க்கம் செய்துவைத்ததுடன் நாடாவினை வெட்டி  அரங்கினையும் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் மங்கல விளக்கேற்றியதுடன், அங்கு இடம்பெற்ற வரவேற்பு நடனத்தினையும், ஆலையடிவேம்பு ராம் கராத்தே சங்க வீரர்களின் கராத்தே கண்காட்சி நிகழ்வினையும் கண்டுகளித்தனர்.

இதன்போது உள்ளக விளையாட்டுப் பயிற்சி நிலையத்திற்காக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை விளையாட்டுப் பொருட்களும் அமைச்சரினால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.மதிவண்ணன், அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன், ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நிருவாக உத்தியோகத்தர் .சசீந்திரன் மற்றும் கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் கே.தர்மதாஸ உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.








 

No comments: