Tuesday 1 December 2015

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா

(தியாஷினி)

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் எஸ்.ரி.ஏ.சொலிடாரிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையோடு இயங்கிவருகின்ற அம்மன் மற்றும் லோட்டஸ் முன்பள்ளிகளிலிருந்து தமது பாலர் கல்வியினை முடித்து அடுத்த வருடம் முதல் அரச பாடசாலைகளுக்குச் செல்லவுள்ள சிறார்களுக்கான விடுகை விழாவும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் நேற்று (01) மாலை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் மற்றும் எஸ்.ரி.ஏ.சொலிடாரிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் வி.வாமதேவன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்ட இவ்விழாவில் குறித்த பாலர் பாடசாலைகளின் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முழுமையாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் சிறார்களின் கவிதை, பாடல், நடனங்கள் போன்ற கலை நிகழ்வுகள் பல மேடையேற்றப்பட்டதுடன், பிரதேச செயலாளரின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வுகளின் இறுதியில் பாலர் கல்வியினை முடித்த சிறார்களுக்குப் பிரதேச செயலாளரினால் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.























No comments: