Monday 21 December 2015

ஆலையடிவேம்பில் போஷாக்கிற்கான பிரதேசமட்ட செயற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

அபிவிருத்தி தொடர்பான அரசின் கொள்கைகளுக்கமைய சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கைமுறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளுக்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (21) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


குறித்த வைபவத்தை முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்ததுடன், பிரதேச செயலாளரின் தலைமையில் இலகுபடுத்துனராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜாவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகத்தர்களும், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ஆலையடிவேம்பு பிரதேசமட்ட கிராமக்குழுக்களின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் வரவேற்புரையை முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் நிகழ்த்தினார்.


அவரைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், மனித உடலுக்கு எவ்வித போஷாக்கையும் வழங்காது பசிக்கின்ற வயிற்றை மட்டும் நிரப்பக்கூடிய துரித உணவுகளுக்கு இலங்கையின் இன்றைய இளம் சமுதாயம் அடிமைப்பட்டுக் கிடப்பதன் விளைவாக மறைமுகமாக உருவாகிவரும் உடல், உள நலமற்ற எதிர்கால சந்ததியைக் கொண்ட ஒரு பரிதாபத்துக்குரிய இலங்கைத் தேசம் என்ற பாதிப்புமிக்க நிலையை அடியோடு இல்லாதொழிக்கும் மிகமுக்கிய நோக்குடனேயே சுதேச மருத்துவ அமைச்சினால் இவ்வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டு இலங்கை முழுவதிலுமுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்து குறித்த வேலைத்திட்டத்தில் தமது மகளிர் அபிவிருத்திப் பிரிவின் பங்களிப்புகள் குறித்து மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பங்கு தொடர்பாக சிரேஷ்ட பொதுச் சுகாதார மருத்துவமாது திருமதி. ரி.கணேசமூர்த்தியும், கிராம உத்தியோகத்தர்களது செயற்பாடுகள் தொடர்பாக கிராம உத்தியோகத்தர் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டரும், இறுதியாகக் கிராமமட்ட தன்னார்வக்குழுத் தலைவியொருவரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் இலகுபடுத்துனராகக் கலந்துகொண்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா கருத்துத் தெரிவிக்கையில், அரசின் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் தாபிக்கப்பட்டுள்ள போஷாக்கு மேம்பாட்டுக்கான கிராமமட்ட செயற்பாட்டுக் குழுக்களில் அங்கம் வகிக்கும் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை இங்கு மிக முக்கியமானதாகக் கொள்ளப்படுவதாகவும், அவர்களின் சிறப்பான சேவைகளைத் தமது கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி எதிர்காலத்தில் இதன் பெறுபேறுகளை நேர்ப் பெறுமானங்களில் அடைந்துகொள்வதற்கான ஆதரவு ஒவ்வொரு கிராமமட்ட தன்னார்வக்குழு அங்கத்தவர்களிடமிருந்தும் கிடைக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழு அங்கத்தவர்களின் கடமைகள் தொடர்பாக விளக்கமளித்த பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, அங்கு அவர்கள் எழுப்பிய சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார்.









No comments: