Tuesday 6 October 2015

தேசிய சூழல் பாதுகாப்பு மாதத்தினைச் சிறப்பிக்கும்வகையில்

பிரேம்....
   இலங்கைத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய சூழல் பாதுகாப்பு மாதத்தினைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவும் திவிநெகும அபிவிருத்திப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ பயன்தரும் பழக்கன்றுகள் விநியோகமும் மரநடுகை வைபவமும் இன்று (05) காலை ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் - 1, தீவுக்காலை கிராமத்தில் இடம்பெற்றன.





ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம உத்தியோகத்தர் எஸ்.சுமணாரதி, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.நந்தகுமார், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாமினி, அபிவிருத்தி உதவியாளர் சித்தீக் ரஸ்மி, அக்கரைப்பற்று கிழக்கு பிரதேச விவசாயப் போதனாசிரியர் எம்.கோகுலராஜ் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.கதாகரன், திருமதி.அகிலராணி திலகராஜா ஆகியோரும் குறித்த கிராமப் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர், அரசாங்கம் இப்பயன்தரும் மரக்கன்றுகளைப் பகிர்ந்தளிப்பதன் நோக்கம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரநடுகையின் அவசியம் குறித்தும் பேசினார். அடுத்து விவசாயப் போதனாசிரியர் பேசும்போது குறித்த மரக்கன்றுகளைப் பராமரிக்கும் விதங்கள், பசளையிடும் முறைகள் என்பன தொடர்பாக பயனாளிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அடுத்து இடம்பெற்ற மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளரும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். அதனைத் தொடர்ந்து அதிதிகள் இணைந்து பயனாளிகளுக்கான மரக்கன்றுகளைப் பகிர்ந்தளிக்கும் வைபவமும் இடம்பெற்றது

No comments: