Thursday 8 December 2016

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கிழக்கு மாகாணத்தின் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை   மதிக்காத வகையில் செயற்படும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.


திருகோணமலையில் முஸ்லிம் மாணவிகள் சிலரின் உரிமைகளை மறுக்கும் வகையில்  பரீட்சை மேற்பார்வையாளர்கள் நடந்து கொண்டுள்ளதாக வௌியாகும் செய்திகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

திருகோணமலையில் உள்ள இராஜகிய பாடசாலை மற்றும்  முள்ளிப்பொத்தானை சிங்கள் வித்தியாலங்களில் முஸ்லிம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிலர்  அச்சுறுத்தியுள்ளதாக அறிவதாகவும் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரது மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை  அணிவதற்கும் அவர்களின் மத கலாசரங்களை பின்பற்றுவதற்குமான உரிமை  இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே அரசியல் யாப்புக்கு முரணாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று திருகோணமலை பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அது தொடர்பில்  கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

No comments: