Monday 19 October 2020

நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம்

haran

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (19) நடைபெற்றது. 

நிமலராஜனின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, 20 சிட்டிகளில் சுடரேற்றி, மலரஞ்சலியும்  ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன், பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். 

தமிழ் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தமது கடமையை ஊடகவியலாளர்கள் முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை, இதன்போது முன்வைக்கப்பட்டது. 

ஊடகவியலாளர் நிமலராஜன், 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து, சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

No comments: