Wednesday 5 October 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு


கடந்த அக்டோபர், 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் கோளாவில் - 1, அம்மன் மற்றும் மறுமலர்ச்சி முன்பள்ளிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின ஒன்றுகூடலும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (4) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வை உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமைதாங்கி நடாத்தியிருந்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.ஹேந்திரமூர்த்தி ஆகியோருடன் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்குபற்றிய இந்நிகழ்வின் தொடக்கத்தில் வண்ணப் பதாதைகளையும் அலங்காரங்களையும் ஏந்தியவாறு சிறுவர்கள் நிகழ்த்திய 50 மீற்றர் நடைப்பவனியானது சாகாம வீதியில் பிரதேச செயலகம் வரை இடம்பெற்றிருந்தது.

குறித்த நடைபவனி பிரதேச செயலகத்தை வந்தடைந்ததும் உதவி பிரதேச செயலாளர் தலைமையிலான உத்தியோகத்தர்களால் சிறுவர்கள் கைலாகு கொடுத்து வாழ்த்தி வரவேற்கப்பட்டனர். பின்னர் இடம்பெற்ற ஒன்றுகூடலில் உதவி பிரதேச செயலாளர் விசேட உரையாற்றியதோடு ஏனைய உதியோகத்தர்களோடிணைந்து சிறார்களுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கிவைத்தார்.










No comments: