Tuesday 23 August 2016

பெண்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு

எஸ்.கார்த்திகேசு....

 கணவன்மார்களை பறிகொடுத்து குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மாதாந்தம் ஏதாவதொரு கொடுப்பனவை வழங்குவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியூடாக நடவடிக்கை எடுக்குமாறு திருக்கோவில் பிரதேசத்தைச்; சேர்ந்த
03 பிள்ளைகளின் தாயான பாக்கியம் சாந்தகௌரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு அம்பாறை, திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '2006.11.25 அன்று திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தங்களின் வீட்டிலிருந்து தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எமது கடைக்கு வியாபாரம் செய்வதற்காக எனது கணவர் சென்றபோதே, காணாமல் போனார். அன்று முதல் இன்றுவரை எனது கணவரைத்  தேடித் தருமாறு கேட்டு நான் போகாத இடங்கள் இல்லை. இதுவரையில் எனது கணவர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனது கணவர் காணாமல் போனபோது, எனக்கு 04 மாத கைக்குழந்தையொன்றும் 02 சிறு பிள்ளைகளும் இருந்தனர். எனது பிள்ளைகளை வாழவைக்க வேண்டுமென   நினைத்து இடியப்பம், பிட்டுச் செய்தும்  மரவள்ளிக்கிழங்கு பொரித்தும் விற்பனை செய்துவருவதுடன், சில்லறைக்கடையொன்றையும் நடத்துகின்றேன். இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், எனது பிள்ளைகளின் படிப்புச் செலவை பூர்த்தி செய்வதற்கு போதாமலுள்ளது' என்றார். 'ஆகவே, என்னைப்போன்று கணவனை இழந்தும்  பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமலும் தாயாக வாழும் கொடுமையான வாழ்க்கை, இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படாத வகையில் அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்' எனவும் அவர் கூறினார். 

No comments: