Monday 18 July 2016

கதிர்காம தீர்த்தோற்சவம் 21ம் திகதி தீர்த்தோற்சவம்

புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வடுடாந்த ஆடிவேல்  உற்சவம் ஜூலை  05ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.


கதிர்காமத்தினை தமிழில் கதிர் + காமம் என்று விளக்கி கூறுகின்றனர்    இருப்பினும் சிங்களத்தில் கதரகம என்று அழைக்கின்றமையும் கேற்கக் கூடியதாகவுள்ளது இத்தலத்திற்கு இவ்வாறான சிறப்புப் பெயர் வந்தமைக்கான காரணம் ஒரு புதிராகவே உள்ளது
கார்த்திகேய கிராம கஜரகம என்பதன் திரிபே இப் பெயர் வரக் காரணம் என்போரும் ,கதிர் –ஒளி காமம் –அன்பு நிறைந்த இடம், என்பதுடன் கதிரு எனும் சிங்களச் சொல்லின் மருவு என கூறுவோரும் உள்ளனர்.


இன்று சிங்களவர் ,தமிழர் ,இஸ்லாமியர் என பலரும் சகோதரத்துடன் பக்தி என்ற பக்குவத்துடன் சென்று வழிபடும் திருக்கோயிலாக விளங்குவது இவ் ஆலயத்தின் தனிச் சிறப்பம்சமாகும்
சிங்கள மொழி இலக்கியமான ஸ்கந்த உபாத என்கின்ற நூலில் தமிழ் அரசனான எல்லாளனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காம கடவுள் அருள் புரிந்ததாக சரித்திர ஆய்வாளர்களால் சொல்லப்பட்டுள்ளது .

இலங்கை வரலாற்றினை எடுத்தியம்பும் சிங்கள இலக்கியமான மகாவம்சத்திலும் கதிர்காமத்தினை சிறப்பித்து சொல்கின்றது இவற்றின் காரணங்களால் இன்றைக்கும் கதிர்காமம் பெளத்த மத ஆலய  பரிபாலன சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதனை காணமுடிகின்றது .

இருப்பினும் இலங்கை தமிழ் இந்துக்கள் தங்களின் தனிப் பெரும் கடவுளாக கதிர்காம கந்தனை கருதுகின்றனர் .கந்த புராணத்தில் உள்ள ஏமகூடப் படலத்தில் இந்த கதிர்காமம் அதன் சிறப்பும் சொல்லப்பட்டிருக்கின்றது அது மட்டுமற்றி அருனகிரிநாதரால் திருப்புகழ் பாடப்  பெற்றிருப்பதும் சிறப்பாகும்.
அருனகிரினாதரின் கதிர்காம திருப்புகழில்….
 ” வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே….என்று பாடுகின்றார் ” .இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்யும் பூசகர்களான சிங்கள பொழி பேசும் கப்புறாளை என்போர் தாங்கள் வள்ளி நாயகியின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடைவதை கானலாம்

தொல்காப்பியம் பேசும் வணக்க முறையான வாய்கட்டி வழிபாடு செய்யும் முறைமை இருப்பதனை சுட்டிக்காட்டும் தமிழறிஞர்கள் திருமுருகாற்றுப்படை பேசும் ஜந்தாம் படை வீடும் கதிர்காமம் என்று குறிப்பிட்டு இருப்பது வரலாற்று சான்றாகும்.

இதன் காரணமாக 1908ஆம் ஆண்டு முதல் தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக் கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர் இருப்பினும் இவை சாத்தியமற்றுப் போயின

இன்று கப்புறாளை எனும் சிங்கள இனத்தவர்களே வாய்கட்டி திரைக்குப் பின்ணால் முருகனுக்கு பூசை செய்கின்றனர் இதனை  விட அதிசயம் என்னவெனில் இங்கு திரைக்குப் பின்னால் ஒரு பெட்டிக்கே பூசைகள் இடம் பெறுகின்றன பெட்டியில் இருப்பது என்ன என்பது இது வரை பரமரகஷியமாகவே உள்ளது.

இவ் ஆலயத்தில் காவடி எடுத்தல் கற்பூரச் சட்டி  எடுத்தல் அங்கப் பிரதற்சனம் செய்தல் ,அடியழித்தல் , தேங்காய் உடைத்தல் ,தீ மிதித்தல் ,முள்ளு மிதியடி , போன்ற இந்து மத வணக்க முறைகள் அங்கே பல்லின மக்களாலும் அனுஸ்டிக்கப்படுவது இந்துக்களுக்கு சிறப்பினை சேர்க்கும் ஒன்றாகவே காணக்கிடைக்கின்றது
சிங்கள மக்கள் கதரகம தெய்யோ என்று வழிபாடு ஆற்றுகின்றனர் அங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் மீது அளவற்ற பக்தி இருக்கின்றது  வள்ளியை திருமனம் செய்த இடமாக கதிர்காமத்தினை இவர்கள் நம்புகின்றனர் .

இலங்கையின் இரு மொழி இலக்கியம்களிலும் கதிர்காம வள்ளி கல்யான கதைகளைக் காணலாம் முருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை வள்ளியோடு இங்கு தங்கி விட்ட கந்தக்கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாகவும் ஆனாலும் அவ் முயற்சி தோற்றுப் போக அவளும் அங்கு தனிக் கோவில் கொண்டு விட்டதாகவும் இப் போதைய ஜதீக கதைகள் சிலவும் கூறுகின்றன.

குமரனின் கதிர மலைக்கு அருகில் வள்ளி மலை தற்போதும் உள்ளது அங்கே வள்ளியம்மை கோவில் உள்ளது சிறப்பம்சமாகும் கதிரமலையான ஏழுமலைக்கு ஏறிச் செல்லும் பக்தர்கள் அதன் அருகாமையில் உள்ள வள்ளிமலைக்கும் சென்று தரிசனம் பெற்றுவருவது சிறப்பம்சமாகும் .
ஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகம பூர்வ பூசை நடைபெற்று வந்தது என்பது இந்துக்கள் சிலரின் நம்பிக்கையாகும் இலங்கையில் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கதிர்காம பெயருடைய ஆலயங்கள் அமையப் பெற்றுள்ளன அந்தவகையில் யாழ்பானம் புலோலி உபய கதிர்காமம் , நல்லூர் பாலகதிர்காமம், காரைநகர் கதிர்காமம் ,நீர்வேலி செல்லக் கதிர்காமம் ,செல்வச் சந்நிதி ,மட்டக்களப்பு சின்னக்கதிர்காமம் ஆன மண்டூர் மற்றும் தாந்தாமலை ,  வெருகல் கந்த சுவாமி கோவில் , உகந்தை போன்ற சில ஆலயங்களை  ஆதாரமாகச் சொல்லலாம்

இந்தக் கோவில்களின் வரலாறும் வழிபாடும் கதிர்காமத் தலத்தின் மரபினையும் நெருக்கமான பினைப்பினையும் ஒன்றித்ததாக அமைந்துள்ளது இவற்றில் பலவற்றில் கதிர்காம மகோற்சவ காலமாகிய ஆடிப் பூரனையினை ஒட்டிய திருவோனத் திருனாளை தீர்த்தவாரியாக மகோட்சவ நிறைவாகக் கொண்டதாக இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது
இலங்கை அரசு கதிர்காமத்தை புனித நகராக  1960களில் பிரகடனம் செய்ததுடன் ஒரு கட்டுப்பாட்டின் கீழ்  ஒழுக்கவிழுமியங்கள் பேனப்பட்டு வருகின்றன.
திருவிழாவின் போது பெரகர என அழைக்கும் வீதிஉலாவின் போது கப்புறாளை  கதிர்காம கந்தனின் திரை மறைவு புனித பேழையினை துனியினால் போர்த்தி மிகுந்த பயபக்த்தியுடன் யானையின் மீது அமர்த்தி வீதி உலா எடுத்துவரும் காட்சி தரிசனமே சிறப்பாகும் .

 இப் பேழையினுள்  சுப்ரமனிய யந்திரம் உள்ளது என்று ஒரு நம்பிக்கையும் உண்டு ….இதனை விட செஞ்சந்தன கட்டையால் ஆன ஆறுமுகப் பெருமானின் திருவடிவம் இருப்பதாகவும் இன்னும் பலவாறும் ஜதீகக் கதைகள்  சொல்லப்படுவதை  கேற்க முடிகின்றது… ஆனால் இது இன்றும் கதிர்காம கந்தனின் இரகசியமாக இருந்து வருவது நோக்கத்தக்கது. எது எவ்வாறு இருப்பினும் கதிர்காமக் கந்தனின் அருள் எங்கும் நிறைந்திருப்பது உண்மையாகும்.

 .
 பாதாயாத்திரை….
இந்த நவீன காலத்தில் எத்தனை வாகன வசதிகள் ஏற்பட்டு விட்ட போதும் பல மாதங்களை இதற்கென ஒதுக்கி பாத யாத்திரை செய்து வழிபாடு ஆற்றும் பண்பு இன்றும் பேனப்பட்டு வருகின்றமை முருக பக்திக்கு பெரும் சான்றாகும் .

கதிர்காம உட்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்
இவற்றில் 80வீதமான பக்தர்கள் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்துதான் காட்டினூடாக பாதயாத்திரை பேற்கொள்வது வழமையாகி விட்டது

நாட்டின் நாலா புறத்திலிருந்தும் மத்திய மலை நாட்டிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபடுவார்கள் இதன்போது அமைப்புக்கள் , குழுக்கள்,ரீதியாகவும் ஜோடியாகவும் தனியாகவும் இப் பாதயாத்திரையுனை மேற்கொள்கின்றனர்




எனினும் இதில் யாழ்ப்பானம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் 54 நாட்களைக் கொண்ட வேல்சாமி தலைதாங்கும் குழுவினரே இலங்கையின் நீண்ட கதிர்காம பாதயாத்திரையாக இன்றும் கருதப்படுகின்றது

இதற்கு சான்றாக இவர்கள் வடக்கு ,கிழக்கு,தெற்கு ஆகிய 03 மாகானங்களையும் , யாழ்ப்பானம் , கிளிநொச்சி ,முல்லைத்தீவு, வ்வவுனியா ,திருகோனமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களே யாத்திரையின் வனவழி பாதையாக அமைந்திருக்கின்றது

காட்டுப்பாதை அற்புதம்…
கதிர்காம வனவழிப்பாதையாத்திரையானது கொடிய மிருகங்களின் இருப்பிடமான கானகங்களுக்கு இடையறுத்துச் செல்லும் இவ் பாதயாத்திரையில் செல்லும் பாதையெங்கும் கல்லும் முள்ளும் மணலும் புல்லும் நீரும் வனப்பும் வெயிலும் வதைக்க கந்தப் பெருமான் எங்கள் சொந்தப் பெருமான் என்று கூறிக் கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தாம் கொண்டு வந்த இசைக்கருவிகளுடன் கந்தன்  பாமாலை பாடியவாறு செல்வர்.

உகந்தை யால சரனாலயம் ஊடான பாதயாத்திரை   கூமுனை இடத்திலிருந்தே ஆரம்பமாகின்றது இப் பாதை 27ம் திகதி சம்புரதாய ரீதியாக மதச்சடங்குகளுடன்  திறக்கப்படுகின்றது .

இந்த தினத்தில் இருந்தே வனவழியூடான யாத்திரை ஆரம்பமாகின்றது குமன பறவைகள் சரனாலயத்தில் இருந்து குமுக்கன் ஆற்றினை அடைந்து அங்கிருந்து அடர்ந்த வனவழியூடாக வன்னாத்தி கினத்தடி , பறவைக்குளம் ,மனல் பாதை , வெள்ளி முள் தோட்டம் , உப்பாறு ,வீரச்சோலை, துலையாப்பலை காடு, நாவலடி ,கட்டகாமம் , போன்ற வற்றுனூடாக கதிர்காம ஆலய்த்தினை பத்தில் பதியடைவது எனும் மரபுக்கமைய வந்தடைவர்  என்பது  குறிப்பிடத்தக்கது .

இந்த வன வழிப்பாதை திறத்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் , உகந்தை ஆலய வண்ணக்கர் , , திருக்கோவில் ,லாகுகல,ஆலையடிவேம்பு  பிரதேச செயலாளர்கள் ,சுகாதார தினைக்களம் , போக்குவரத்து சபை, மின்சார சபை , தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை , உடன் பாதுகாப்பு படையினரும் கலந்து கொண்டு திறக்கப்படும் தீர்மானம் எடுக்கப்படுகின்றமை சிறப்பாகும்  


கதிர்காம திருக்கொடியேற்றம்…

ஆலய திருக் கொடியேற்றல் நிகழ்வு கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் இடம் பெறுவது சிறப்பம்சமாகும்

பள்ளிவாசலினுள் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையுல் ஈடுபட்டு பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் அக் கொடியுடன் பள்ளிவாசலை வலம் வந்து உள்ளே பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத பெரியார்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படுவது வளமை.

அரோகரா சத்தம் வின்னைப்பிளக்க மத மொழிகளைக் கடந்து அனைவரும் ஒன்றினைந்து வழிபடும் பண்பு மெய்சிலிர்க்கும் உள்ளுணர்வு என்றே கூறலாம்.

எது எப்படி இருப்பினும் கதிர்காமத்தில் ஒரு அபரிமிதமான சக்தி பரவியிருப்பதை அங்கு செல்லும் பக்த அடியார்கள் உணர்து சொல்வதையும்  அந்த சக்தி எல்லோரையும் இந்த காலங்களில் கவர்திளுப்பதனையும்  யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

No comments: