Monday 20 June 2016

இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை

தனியார் வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் இளைஞர்களின் தொல்லைக்கு உள்ளாகுவதாக தன்னிடம் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புக் குழுவினர் மூலமாக கவனம் செலுத்தப்பட்டு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். பெற்றோர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வகுப்புகள் நிறைவடையும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் சந்திகளில் நின்று பெண் பிள்ளைகளை கேலி செய்வதும் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வேகமாக அங்கும் இங்குமாக ஓடித் திரிவதால் மாணவிகள் அச்சமடைகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: