Thursday 28 April 2016

பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி – சைக்கிளோட்டம்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளில் இரண்டாவது போட்டியான சைக்கிளோட்டம் இன்று, 29-04-2016 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது.

முதலாவது போட்டியான மரதன் ஓட்டத்தைத் தொடர்ந்து சாகாம வீதியின் பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பமான இப்போட்டி நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும், சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிக்குழுவின் தலைவருமான வி.ஜெகதீசன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

ஆறு வீரர்கள் பங்குபற்றிய குறித்த சைகிளோட்டப் போட்டியானது சாகாம வீதி வழியாக பனங்காடு தில்லையாற்றுப் பாலம், சிப்பித்திடல் மயானம், புட்டம்பைச் சந்தி, நீத்தையாற்றுப் பாலம், கூளாவடிச் சந்தி, சாகாம இராணுவ முகாம் என்பனவற்றைக் கடந்து காஞ்சிரங்குடா சந்தியை அடைந்து, பின் அக்கரைப்பற்று நோக்கிய பொத்துவில் வீதி வழியாக விநாயகபுரம் பஸ் தரிப்பிடம், திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம், களுதாவளைப்  பிள்ளையார் கோவில், தம்பட்டை முருகன் கோவில், அக்கரைப்பற்று இராணுவ முகாம் ஆகியவற்றைக் கடந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் சென்று வலதுபக்கமாகக் கல்முனை வீதிக்குத் திரும்பி, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர் கடந்து காரைதீவு விபுலானந்தர் சுற்றுவட்டம் வரை சென்று, மீண்டும் திரும்பி அக்கரைப்பற்று நோக்கி வந்து சாகாம வீதியை எட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலை வந்தடைந்து நிறைவுற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய ஜொய்சன் பல்தசார் என்ற வீரர் முதலாமிடத்தையும், ஜே.சுரேந்திரராஜா என்ற வீரர் இரண்டாமிடத்தையும், எஸ்.லக்ஸரின் என்ற வீரர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றிய வீரர்களுக்கான ஆறுதல் பரிசுகளும் இன்று (29) மாலை கண்ணகிகிராமம், கனகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு வைபவத்தில் வழங்கிவைக்கப்படவுள்ளன.







No comments: