Friday 31 January 2014

"ஆலையடிவேம்பில் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு மூன்றாவது கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கிவைப்பு"


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குக் கடந்த 2012 ஆம் வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் பட்டதாரிப் பயிலுனர்களாக இணைக்கப்பட்டவர்களில் மேலும் 29 பேருக்கு மூன்றாம்கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கும் வைபவம் 29.01.2014, புதன்கிழமையன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் கே.எல்.ஏ.எம்.ரஹ்மத்துல்லா மற்றும் கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பிரதேச செயலாளருடன் இணைந்து நியமனங்களை வழங்கிவைத்தார்கள்.

இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர், கடந்த 28.10.2013 மற்றும் 04.12.2013 ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட முன்னைய இரண்டு நிகழ்வுகளிலும் முறையே 39 மற்றும் 14 பட்டதாரிப் பயிலுனர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதுவரையில் நிரந்தர நியமனங்கள் கிடைக்கப்பெறாதுள்ள மேலும் 15 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அவற்றை உடனடியாகப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments: