Friday 31 January 2014

"கவடாப்பிட்டி கிராமத்தில் பொதுக்கிணறுக்கான அடிக்கல் நாட்டிவைப்பும் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பும்"



சுவிற்சர்லாந்து நாட்டில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களால் நிருவகிக்கப்படும் பொதுத்தொண்டு அமைப்புக்களான சூரிச் நகர அருள்மிகு சிவன் ஆலய அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கம் மற்றும் துர்க்கா தமிழர் கலை கலாசார மன்றம் ஆகியவற்றுடன் சுவிஸில் வசிக்கும் அமரத்துவமடைந்த திருமதி.செல்லப்பா பார்வதி அவர்களுடைய குடும்பத்தாரின் அனுசரணைகளுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள குடியேற்றக் கிராமமான கவடாப்பிட்டியில் வாழும் 37 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கியுள்ள குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும்வகையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணற்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மற்றும் அக்கிராமத்திலுள்ள 7 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு என்பன 28-01-2014, செவ்வாய்க்கிழமை காலை அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சண்முகம் கார்த்திக் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், கிராமசேவை உத்தியோகத்தர்களான ஏ.தர்மதாச, ஆர்.கோகுல்ராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுதர்சினி, கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலய அதிபர் எஸ்.சுரேஸ் ஸ்டீபன்சன், ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் தலைவர் வி.சந்திரசேகரம் ஆகியோருடன் அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.

இங்கு இந்துமதப் பாரம்பரியத்துடனான விசேட பூஜை நிகழ்வுடன் பிரதேச செயலாளரும் ஏனைய பிரமுகர்களும் பொதுக்கிணற்றுக்கான அடிக்கற்களை நாட்டிவைத்ததுடன், கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தில் பயிலும் 7 மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகளையும் வழங்கிவைத்து உரையாற்றினர்.

No comments: