Thursday 7 March 2019

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவன் 125வது ஆண்டு நிகழ்வுகள்





(சசி )

 மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவன் 125வது ஆண்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி கல்லடியிலுள்ள சிவானந்தா தேசியப்பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.


இந் நிகழ்வில், சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களுக்கான எழுச்சிமிகு கருத்துக்களை இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் தென் இந்திய திரைப்பட நடிகர் விவேக் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
இராமகிருஷ்ண மிசன் இனமத சமூக கலாசார வேறுபாடுகளன்றி சமய சமரச நெறியில் நின்று உலகளாவிய ரீதியில் சமூகப்பணியாற்றி வரும் தர்ம ஸ்தாபனமாகும்.
அமெரிக்காவில் சிகாகோ சர்வ மத மகா சபையில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றி கீழைத் தேச பண்பாட்டு, கலாசாரங்களை உலகறிய பறைசாற்றிய 125வது ஆண்டு நிகழ்வுகளை இராமகிருஷ்ண மிசன் உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு நிகழ்வு மிசனின் மட்டக்களப்பு தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பிரதம பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
ஆசியுரையினை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் ஆசியுரை வழங்கியதைத் தொடர்ந்து மட்ட விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளின் கராத்தே முன்னளிப்பு நடைபெறும். அடுத்ததாக தென்னிந்திய திரைப்பட நடிகர் விவேக்கின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் நடிகர் விவேக் கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.





No comments: