Tuesday 13 June 2017

ஆலையடிவேம்பில் புதிய வீடுகளுக்கான அடிக்கற்கள் நட்டுவைப்பு



சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் வைபவங்கள் இன்று (13) காலை அக்கரைப்பற்று – 7/4 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றன.

குறித்த கிராம சேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கருணாநிதியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவ்வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துவைக்கும் முகமாக அடிக்கற்களை நாட்டிவைத்தார்.

இவ்வைபவத்தில் பிரதேச செயலாளருடன் ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன், கிராம அலுவலர்களான திருமதி. பி.ஜினித்தா, ஏ.சுபராஜ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு அடிக்கற்களை நட்டு வைத்தனர்.

ஒவ்வொன்றும் சுமார் 0.8 மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைக்கப்படவுள்ள குறித்த வீடுகளை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் தலைமையில் விரைவில் அம்பாறையில் நடைபெறவுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.










No comments: