Monday 27 February 2017

415 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 415 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.


சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட காரியாலயத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்காலியமாக இயங்கிவரும் இந்நிறுவனத்துக்கு, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால், சம்மாந்துறை வங்களாவடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாமையில் 3 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இக்கல்வி நிறுவனத்தில், கணக்கியலில் தேசிய உயர் டிப்ளோமா, ஆங்கிலத்தில் தேசிய உயர் டிப்ளோமா மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய உயர் டிப்ளோமா போன்ற கற்கை நெறிகள் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர்.
சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப் புதிய உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், வியாபார நிர்வாகத்தில் தேசிய உயர் டிப்ளோமா, சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் தேசிய உயர் டிப்ளோமா, ஆங்கிலத்தில் தேசிய உயர் டிப்ளோமா, உணவு தொழில்நுட்பவியலில் தேசிய உயர் டிப்ளோமா, முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா, தொழில்நுட்பவியலில் (விவசாயம்) தேசிய உயர் டிப்ளோமா, நுகர்வோர் விஞ்ஞானங்கள், உற்பத்தி தொழில்நுட்பவியலில் உயர் தேசிய டிப்ளோமா உள்ளிட்ட 15 கற்கை நெறிகள் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் நடைபெறவுள்ளன.
இதன்மூலமாக  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாது போகும் அம்பாறை மாவட்ட  மாணவர்களின் உயர் கல்விக்கு பெரிதும் வழிவகுக்கும்.
உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அமையவுள்ள இடத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்,  இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்ததின் உயரதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர், இன்று பார்வையிட்டு, அதன் நிர்மாணப்பணிகள் சம்பந்தமாக கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.


haran

No comments: