Tuesday 6 March 2018

அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் சில இடங்களில் வன்செயல்கள் இடம்பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


7 முதல் 10 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்வார். ஆனால், அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம்.

பொதுவாக நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் போது சுமூக நிலையை உருவாக்கவே அவசரநிலையை அமல்படுத்துவது வழக்கம்.

ஆனாலும், இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு போர், அதற்கு முந்தைய ஜேவிபி கலவரம் ஆகியவை காரணமாக 1978 முதல் 2009இல் போர் முடிவுக்கு வரும் வரை அவசர நிலை தொடர்ச்சியாகவே அமலில் இருந்து வந்துள்ளது.

அவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும்.

குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும்.

தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்கு அதிகாரம் இருக்கும்.

பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள்கூட அமைக்கப்படலாம்.


கலவரங்கள்

பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும். அனுமதியின்றி கூடும் கூட்டமே கடந்த காலங்களில் பிறரை தாக்கி சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கலவர நேரங்களில் வன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.

தேவையான இடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும்.

நிலைமையை முடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்க அதிபருக்கும் மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும்.

ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கையும் அமலுக்கு வரலாம்.

குறிப்பாக சமூக ஊடகங்களே வன்செயலை பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படியான தவறுகளை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிலைமையை மிகைப்படுத்தி காண்பிப்பது, வெறுப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு இங்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பழகிய ஒன்று:

இலங்கையை பொறுத்தவரை அவசரகால நிலை இங்கு பழகிப்போன ஒன்றுதான். கடந்த 30 வருட காலப் போர் அதனை குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு பழகிப்போன ஒன்றாகச் செய்துள்ளது.

போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அவசரகால நிலை இங்கு நீக்கப்பட்டாலும், இங்கு இன்னமும் பயங்கரவாதச் சட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றது.

பொதுவாக இங்கு சிறுபான்மையினர் இப்படியான சூழ்நிலையில் அவசர நிலையைப் பார்த்து ஆறுதலைவதற்கு பதிலாக குழப்பமடைவதே அதிகம் என்று கூறுகிறார்கள். பொதுவாக தமது உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாகவே இதனை அவர்கள் பார்க்கிறார்கள்.
haran

No comments: