Monday 1 January 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதுவருட கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்


மலர்ந்துள்ள 2018 ஆம் ஆங்கிலப் புதுவருடத்தின் முதலாவது வேலைநாளில் அலுவலகக் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் சிறப்பு வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் இன்று (02) காலை இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உணவு உற்பத்தி ஆண்டாக இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரியால் வெளியிடப்பட்ட 31/2017 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கமைவாக இன்றைய கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது நடாத்தப்பட்டது.

முதலில் பிரதேச செயலாளர் தேசியக்கொடியை ஏற்றிவைக்க, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் அரசாங்க சேவை உறுதி மொழியினை வாசிக்க அனைத்து உத்தியோகத்தர்களும் தமது நெஞ்சுக்கு நேராகக் கைகளை உயர்த்தி ஒருமித்த குரலில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கமைய எமது இலங்கைத் திருநாடு இவ்வருடம் விவசாயத்தில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் அனைவரும் தத்தமது பங்களிப்புக்களை மிகுந்த அர்ப்பணிப்போடு தாமதமின்றி நேர்மையாக வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து பிரதேச செயலாளர் அங்கு உரையாற்றியிருந்தார்.

அடுத்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் முறையிலமைந்த பயன்பெறுனர் பதிவுத் திட்டத்தின் (e-Customer Registration System) கீழ் முதலாவது பயன்பெறுனரின் இலத்திரனியல் பதிவையும் பிரதேச செயலாளர் அங்கு ஆரம்பித்துவைத்தார்.















No comments: