Tuesday 9 May 2017

ஆலையடிவேம்பில் பனை உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பனை உற்பத்திகளில் ஈடுபடும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று (09) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிதியுதவியோடு அதன் பங்காளி நிறுவனமான அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் (SWOAD) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 22 பேருக்கு பனை உற்பத்தி வேலைகளுக்கான உபகரணங்கள் வாழ்வாதார உதவிகளாக வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, அபிவிருத்தித் திட்ட இணைப்பாளர் எஸ்.எல்.எம்.அன்வர் மற்றும் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் குறித்த திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர் வை.சுகேந்திரராஜ் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து குறித்த வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வின்போது பனை உற்பத்திகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்போடு இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் பற்றியும் அதிகாரிகளால் அங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.














No comments: