ராமனதாஸ்...
1999ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் தொண்டர்களாக வைத்தியசாலைகளில் சேவை புரிந்துவந்த அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்போது தங்களை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுத்த சுகாதாரத் தொண்டர்கள், 'நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடு', 'சுகாதாரத் தொண்டர்களாக வேலை செய்வதை உறுதி செய்', 'நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்து' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
இறுதியில் சுகாதாரத் தொண்டர்களாக கடமை புரிந்தவர்களின் பெயர்ப்பட்டியலுடன் மகஜரொன்றையும் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனிடம்; கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர், இவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் சுகாதார பணிப்பாளரின்; கவனத்துக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்ததாக சுகாதார தொண்டர் அமைப்பின் தலைவர் ஐ.எம்.இப்ராலெப்பை முகமட் நபிர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment