Pages

Friday 21 March 2014

ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 20-03-2014, வியாழக்கிழமை ஆலையடிவேம்பு, திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் உரையாற்றியதுடன், ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள்.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் நாவற்காடு கிராமசேவகர் பிரிவிற்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 21-03-2014, வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Walden